ஓங்காரத்தைக் கனத்தொலித்து
அயராது ஆனந்த ஆர்ப்பரிக்கும்
கடலன்னையின் கைக்குழந்தையாகி
சிலநிமிடம் ….
இமை போர்த்தி செவி சாய்க்க
சில்லிப்பாய் சிருங்கார சலனங்கள்
மனமெங்கும் தேனமுதம் நிரப்பத்
தழைத்தெழுந்த ஆன்ம இராகம்
கடலலையாய் …
கும்மாளக் கூத்திட்டுக்
குதூகளித்தக் கணங்களில்
கட்டித் தழுவி முட்டி மோதி
முயங்கிக் கிறங்கிய உயிர் வலியை
தூரிகைக்கு வரமெனத் தருகிறேன்.
கண்ணிமைக்கா சிறு பொழுதில்
தமிழதன் வனப்பினை
மிடுக்கென உடுத்திக்கொண்டு
காகிதக் கரையோரம் …
தடம் பதிக்கத் தயாராக - இதோ
என் தர்மத் தூரிகை.
தீஞ்சுடர் ஒலியொத்தத்
தேன் மலர் நிறை மரத்தின் மீது
கருநிறக் காக்கைக் குழாம்…
கருமேகம் அடர் நிறமோ ? –எம்
கருஞ்சிறகின் நிறம் விஞ்சுமோ -என
முகிலோடு தாம் கொண்ட வாதங்களை
கரகரவென்றுக் கரைந்துக்
கொட்டித் தீர்த்தன.
மண்ணோடு மோகம் கொண்ட
மேகக் கூட்டம் முடிந்தமட்டும்
குளிர் மூச்சை உள்ளடக்கி -தன்
காதல் கரைத்துக் காதல் கரைத்து
உயிர் நீரென ஊற்றாற்று மடைதிறக்க
மழை …மழை ….
இடி மின்னல் மோதி மிரட்டா
ஆலிங்கண இசை மழையில்
பூரித்துப் பூத்திட்டப் பூமிப் பெண்ணின்
மன வாசம் மண் நிறைக்க …
சுக நாதம் சுகந்தங்களை மீட்டெடுக்க
சொல்லொணா சித்திரப் பூக்களாய்
சிலிர்த்துக் கிடந்த நங்கையின்
நெற்றித் திலகமென படர்ந்திருந்த
ஒரு பசுமரத்து உச்சிக் கிளை !
உள்ளே …! முக்கிலைகள் கூடுமிடத்து
கட்டிக்கிடந்தக் காக்கைக் கூடு
இசை மழைக்கு ஜதி சொல்லும்
குஞ்சுக் குரல்கள் கொஞ்சலிட…
கண்டேன் … கண்டேன் ….
கூட்டுக்கு சிறகு போர்த்தி
தாய் காகம் குடையாக நின்றக் காட்சி …
கண்ணாரக் கண்டேன் !
தாய்மையின் உயரம் கண்டு
அயர்ந்து … தளர்ந்து …
கையெடுத்துத் தொழுதழுதேன்.
தன்னலம் இற்றுப் போன
தாய்மையைக் கர்ப்பித்தப் பெருமிதத்தில்
கம்பீரம் வழிய நின்றது – அந்த
கடற்கரை ஓரத்துப் பள்ளிக்கூடம்…!!