Wednesday, December 8, 2010

கண்ணாமுச்சி


உள்ளத்து வெம்மூச்சில்
குளிர்திலகம் வருத்துதிர்ந்து
கன்னக் கதுப்புகளில்
கரு நிறத்தை வார்த்தெடுக்க
கலையொளிரா கண்குழியில்
இருள் சூழ......

மேலிமையை இழுத்தணைத்து
இருவிழிகள் உறைந்தே கிடக்க
விதி உழுத பள்ளம்தனில்
வேரூன்றி விரவிக்கிடக்கும்
காட்டுக் கொடிகளாய்
நினைவுகளுக்குள் கனவுமுடிச்சிகள்.

உள்ளத்து உயிரணைப்பில்
பவளமல்லி பூஞ்செறிவில்
புகுந்தாடும் பொன்வண்டாய்
நிகழ்வுகளின் நெடுநேர சலசலப்பு

ஓர் சதுரங்க புதிர்போல
பூத்தடங்கி பூரிக்கும் யவ்வனங்கள்
சங்கேத சினுங்கல்கள்...

சற்றேறக் குறைய
சொக்கிச் செருகிக் கொண்ட
சிந்தைகளின் நடுவே....

கனவு முடிச்சுகள்-
மலரிடை தேன் முத்துக்களாய்
சொட்டு சொட்டாக
மனதின் விழி வழியே வழிய... வழிய...

நாணத்தின் நரம்புகள்
நாணல்களாய் வளைய...வளைய...
நெஞ்சினிக்க நிகழ்ந்த தருணங்கள்
கனன்று கனக்க...

மௌனம் மணக்கும் மலராய்
மழலை கொண்ட முத்தமென
மொட்டவிழ முனகலிடும்
உயிரின் ஓசையொடு....
விழியேங்க விழித்திருக்கேன்!!

No comments:

Post a Comment